ஒற்றுமைச் சிலை என்றழைக்கப்படும் உலகின் மிக உயரமான சிலையான "சர்தார் வல்லபபாய் படேல் சிலை விற்பனைக்காக" என்று ஓஎல்எக்ஸ் ஆன்லைன் வணிக இணையதளத்தில் வந்த விளம்பரத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும், பின்னர் இந்த விளம்பரத்தை ஓஎல்எக்ஸ் நிறுவனம் அகற்றிவிட்டது.
குஜராத்தில் வல்லபபாய் படேல் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை முழுவதும் இரும்பால் செய்யப்பட்டது. பெருமளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக இருக்கிறது.
கரோனா வைரஸுக்கான மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்கு நன்கொடையாக வழங்குவதற்காக ரூ. 30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தில் "அவசரம்! ஒற்றுமைச் சிலை விற்பனைக்கு. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான அவசரப் பணத் தேவைக்காக" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்ளூர் செய்தித்தாளொன்றில் இதுபற்றி செய்தி வெளியானதைத் தொடர்ந்து, காவல்துறையிடம் ஒற்றுமைச் சிலை வளாக நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்துள்ளனர்.
இதுபற்றித் தெரியவந்ததும் இந்த விளம்பரத்தை ஓஎல்எக்ஸ் நிர்வாகம் அகற்றிவிட்டது.
காவல்துறையினர் வழக்குப் பதிந்து, விஷமத்தனமாக இவ்வாறு விளம்பரம் செய்த நபரைத் தேடி வருகின்றனர்.