அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளைத் தொடங்குவதற்காக, ராமர் கோவில் அறக்கட்டளைக்கு முதல் நன்கொடையாக மத்திய அரசு ரூ. 1 வழங்கியுள்ளது.
ராமஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளைக்கு மத்திய அரசின் சார்பில் ஒரு ரூபாயைப் பணமாக மத்திய அரசு தந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் சார்பில் இந்தத் தொகையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலர் டி. மர்மு வழங்கினார்.
நன்கொடைகள், மானியங்கள், உதவிகள் மற்றும் பங்களிப்புகளை யாரிடமிருந்து வேண்டுமானாலும் பணமாகவோ, சொத்துகளாகவோ எவ்வித நிபந்தனையுமின்றி அறக்கட்டளை பெற்றுக் கொள்ளும் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அயோத்தி தொடர்பான வழக்குகளில் ஹிந்து அமைப்புகளின் சார்பில் தொடக்கத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பராசரன் இல்லத்திலிருந்து தொடக்கத்தில் செயல்படும் அறக்கட்டளை அலுவலகம் விரைவில் நிரந்தரமான இடத்துக்கு மாற்றப்படும் என்றும் இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.