சேலம்: சேலம் மாநகர் முழுவதும், ஜலகண்டபுரம், எடப்பாடி, காகாபாளையம், வேம்படிதாளம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தை மாதம் 1-ஆம் தேதியையொட்டி 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சங்ககிரி வழியாக சென்றனர்.
சேலம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பாலசுப்ரமணியன், சண்முகசுந்தரம் ஆகியோர் சங்ககிரி அருகே உள்ள பள்ளிப்பாளையம் - பவானி பிரிவு சாலை பகுதியில் உள்ள தீரன்சின்னமலை நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை தொடங்கி இரவு வரை சங்ககிரியை கடந்து பாதயாத்திரையாக சென்ற 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட், தேநீர் ஆகியவற்றை வழங்கினர்.
அப்போது பழனிக்கு பாதயாத்திரையாக செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக தொழிலதிபர்கள் தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தர்கள் சங்ககிரி, ஈரோடு, காங்கேயம், தராபுரம் வழியாக செனறு பழனி மலையை சனிக்கிழமை அடைய உள்ளதாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தெரிவித்தனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழிகளில் பக்தர்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.