திருப்பூர்: மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டும் தனியார் நிதி நிறுவனங்களைக் கண்டித்து திருப்பூரில் பெண்கள் தூக்குப் போடும் போராட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் தனியார் நிதி நிறுனங்ளைக் கண்டித்து தூக்குப் போடும் போராட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற முருகம்பாளையத்தைச் சேர்ந்த பெண்கள் கூறியதாவது:
கரோனா நோய்த் தொற்று பொது முடக்கம் காரணமாக 68 நாள்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பு இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகிறோம். இந்த நிலையில், மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து அத்தியாவசியத் தேவைகளுக்காக வாங்கிய பணத்துக்கு வட்டியுடன் சேர்ந்து மாதத் தவணைகள் செலுத்தி வந்தோம். ஆனால் பொது முடக்கம் காரணமாக 2 மாதங்களாக தவணைத் தொகையை சரிவர செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி 57ஆவது வார்டு முருகம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை வீடுகளுக்கு அனுப்பி அபராதத்துடன் செலுத்தும்படி மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் செல்லிடப்பேசிகளில் அழைத்து தவணைத் தொகையைக் கட்டும்படி மிரட்டல் விடுக்கின்றனர்.
ஆகவே, தனியார் நிதி நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கூடுதலாக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தூக்குக் கயிறு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ரவி, 4 ஆவது மண்டல செயலாளர் வடிவேல், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாவட்ட துணை செயலாளர் பிருந்தா, கிளை செயலாளர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.