சீனாவில் முதன்முதலாக ஸென்ஷென் நகரில் நாய் மற்றும் பூனை இறைச்சி விற்கவும் சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா முழுவதும் பரவலாக அனைவரும் வன விலங்குகள், உயிரினங்கள், வளர்ப்புப் பிராணிகள், பூச்சி புழுக்கள் என அனைத்தையும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி உணவாகக் கொள்கின்றனர்.
உணவாகக் கொள்ளும் வௌவால் உள்ளிட்டவற்றிடமிருந்து கரோனா நோய்த் தொற்று உருவாகியிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே வன விலங்குகளின் இறைச்சி விற்பனைக்கும் சாப்பிடுவதற்கும் தடை விதித்தது.
ஸென்ஷென் நகரோ ஒரு படி மேலே சென்று நாய்கள் மற்றும் பூனைகள் இறைச்சி விற்கவும் சாப்பிடவும் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு வரும் மே மாதம் முதல் நாளிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.
ஆசியா முழுவதும் உணவு இறைச்சிக்காக ஓராண்டில் மூன்று கோடி நாய்கள் கொல்லப்படுகின்றன என்று பன்னாட்டு மனிதநேய அமைப்பு குறிப்பிடுகிறது.
எனினும், நாய்கள், பூனைகளின் இறைச்சியை உண்ணும் பழக்கம் பெரும்பாலான சீனர்களிடம் இல்லை. அவர்கள் அதை விரும்புவதுமில்லை.