திருவாரூர்: திருவாரூர் அருகே கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் உணவில்லாமல் தவித்த சர்க்கஸ் குழுவினருக்கு உதவிகள் கிடைத்து வருகின்றன.
திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஆலத்தம்பாடி புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் சர்க்கஸ் நடத்துவதற்காக, கரூர் பகுதியில் இருந்து ஒரு குழுவினர் வந்திருந்தனர்.
இதனிடையே கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ஊருக்கும் திரும்பிச் செல்ல முடியாமல் அந்த சர்க்கஸ் குழுவினர் தவித்து வந்தனர். வருமானம் இல்லாததால் அந்த குழுவில் இருந்த குழந்தைகள் உள்ளிட்ட 21 பேரும், குதிரை, குரங்கு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளும் உணவுக்கு சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. இவர்களின் நிலை பற்றி தினமணி.காமில் செய்தி வெளியானது.
இதுபற்றி அறியவந்த திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனங்கள், ஜேசீஸ் சங்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஆகியவற்றின் சார்பில் மளிகைப் பொருள்கள் மற்றும் ரூ. 10,000 நிதி உதவியும் வழங்கப்பட்டது.
உதவியபோது, ஜேசீஸ் சங்கத்தின் தலைவர் எடையூர் மணிமாறன், இன்னர்வீல் சங்க பொருளாளர் சங்கீதா மணிமாறன், ஜேசீஸ் சங்கத்தின் பொருளாளர் கிறிஸ்டோபர், சிவனடியார் முத்துக்குமரன் ஆகியோர் இருந்தனர்.
இதேபோல் முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சிதம்பர சபாபதி ஏற்பாட்டின் பேரில் 100 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், தேவையான காய்கறிகள் மற்றும் பணமும் வழங்கப்பட்டன.
மேலும் திருவாரூர் ரோட்டரி சங்கம் சார்பில் இரவு உணவு தயாரித்து அளிக்கப்பட்டது.