பிறந்து ஒரு மாதமேயான ஆண் குழந்தையை யாரோ கோவில் வாசலில் வீசிச் சென்றுள்ளனர். பொதுமக்கள் பால் கொடுத்து மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வன்னிவேடு அருகே இருக்கிறது புகழ்பெற்ற அகத்தீஸ்வரர் கோவில்.
இந்தக் கோவிலுக்கு முன் உள்ள புற்று அருகே ஆதரவற்ற நிலையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையொன்றை யாரோ விட்டுச் சென்றுள்ளனர். குழந்தை அழும் சப்தம் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் குழந்தையை மீட்டு பால் கொடுத்துள்ளனர்.
வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாப்பேட்டை காவல்துறையினர், குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், இந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.