உத்தரப் பிரதேசத்திலுள்ள பிரதாப்கரில் 23 வயதான பெண்ணின் தந்தை மற்றும் அவரின் இரண்டு மாமாக்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு மே மாதம் ப்ரீத்தி வர்மா என்ற பெண் காணாமல் போனதாக அவரது தந்தை மற்றும் மாமன்கள் புகார் அளித்தனர்.
அண்மையில் ப்ரீத்தியின் தந்தைக்குப் பரிச்சயமான வியாபாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த விசாரணையின் போதுதான் ப்ரீத்தி வர்மாவின் கொலை வழக்கின் சில உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.
பிரதாப்கர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் இது குறித்து கூறுகையில், ப்ரீதியின் தந்தை ராஜு வர்மா மற்றும் மாமாக்கள் ஜமுனா பிரசாத் வர்மா மற்றும் ராஜேஷ் வர்மா ஆகியோர் கொலை மற்றும் ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குடும்பம் மே 14 அன்று ப்ரீத்தி வர்மாவின் இறுதி சடங்குகளை ரகசியமாக நடத்தியது மட்டுமல்லாமல், அவரது மொபைல் போனை சடலத்துடன் சேர்த்து எரித்துவிட்டனர்.
ஒரு நாள் கழித்து, குற்றம் சாட்டப்பட்ட மூவரும், உள்ளூர் வியாபாரி சர்வேஷ் சோம்வான்சி என்பவருடன் சேர்ந்து, அன்டூ காவல் நிலையத்திற்குச் சென்று மகள் காணாமல் போனதாக புகாரை பதிவு செய்திருந்தனர்.
விசாரணையில், ப்ரீத்தி ராகுல் வர்மாவை என்பவரைக் காதலித்து வருவதாகவும், அவரை ஒரு கோவிலில் வைத்து ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. தம்பதியினர் தங்களது திருமணத்தை விரைவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக்க பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கணவர் ராகுல் வர்மா விசாரணையில் போலீஸாரிடம் தெரிவித்தார்.
ப்ரீதியின் தந்தையும் இரண்டு மாமன்களும் இந்த ஜோடி ஒருநாள் சந்தித்துப் பேசுவதைப் பார்த்துவிட்டனர். ராகுல் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட, ப்ரீத்தி வீட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டு இரக்கமின்றி அடித்து கொல்லப்பட்டார். கங்கைக் கரையிலுள்ள சிங்கானி காட்டில் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக ப்ரீத்தியின் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
நவம்பர் 11 ஆம் தேதி வியாபாரி சோம்வான்சி பாசி மீது துப்பாக்கி தாக்குதல் தொடர்பாக அஜய் பாசி மற்றும் பவன் சரோஜ் ஆகிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது, ப்ரீத்தி காணாமல் போன வழக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக எஸ்.பி கூறினார்.
அஜய் பாசி ப்ரீதியை நேசிப்பதாகவும், அவர் காணாமல் போனதில் சிலருக்கு பங்கு இருப்பதாக சந்தேகித்ததால் வியாபாரியைத் தாக்கியதாகவும் கூறினார்.
ப்ரீத்தி காணாமல் போன விஷயத்தைப் பதிவு செய்வதற்காக வியாபாரி ப்ரீதியின் குடும்பத்தினருடன் அன்டூ காவல் நிலையத்திற்கு வருவதைக் கண்டதாக அவர் போலீஸாரிடம் கூறினார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய வியாபாரியையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியாக முழுச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை வெளிப்பட்டது.
ராகுல் வர்மாவை ப்ரீத்தி ரகசியத் திருமணம் செய்ததால் கோபத்தில் பெற்ற மகளையே மாமன்களிடன் துணையுடன் இரக்கமின்றிக் கொன்றுவிட்டு அதை மறைத்துவிட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.