பெரம்பலூர்: வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதை தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அளவிலான நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவித்ததற்கும், கடலூரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க அறிவித்துள்ள தமிழக முதல்வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது. டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள முதல்வர், அதுகுறித்து சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றி அறிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் அந்த ஆலை அமைந்தால் அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்போம்.
எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பெற மாட்டோம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது, அவரது அகந்தையை வெளிப்படுத்துகிறது. இந்த சட்டத்தை திரும்பபெறும் வரை ஜனநாயக சக்திகளின் போராட்டம் தொடரும்.
அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் வகையில் உள்ளது. வேலை வாய்ப்பு அடிப்படை உரிமை அல்ல என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு வேலைவாய்ப்புகளை நடைமுறைபடுத்துங்கள் என கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு உடனடியாக மேலாய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி தோழமைக் கட்சிகள் போராட்டம் நடத்தும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தை பரிசீலித்து ஆளுநர் விரைவில் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசு இது தொடர்பாக மீண்டும் ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் தொல். திருமாவளவன். பேட்டியின்போது, கட்சியின் மண்டல நிர்வாகி இரா. கிட்டு உடனிருந்தார்.