எல்லைகள் இல்லா மொழிகள்

2000 ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21 ஆம் நாள் “உலக  தாய்மொழி நாளாக”க்  கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முழக்கம், “எல்லைகள் இல்லா மொழிகள்”!
எல்லைகள் இல்லா மொழிகள்

உலகத் தாய்மொழி நாள் சிறப்புக் கட்டுரை

2000 ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21 ஆம் நாள் “உலகத்  தாய்மொழி நாளாக”க்  கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முழக்கமாக “எல்லைகள் இல்லா மொழிகள்” (“Languages without Borders”) என்னும் வாசகம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடுகளைப்  பிரிக்கும் எல்லைகள், பொருளாதார, நிர்வாக வசதிக்காகச் செயற்கையாக சமீபத்தில் உருவாக்கப்பட்டவை. ஆனால் ஒரு மொழியானது பன்னெடுங் காலமாக மக்களின் தொடர்பு சாதனமாக, கலாச்சார,  பண்பாட்டின் பாதுகாப்புப் பெட்டகமாக, பாரம்பரிய அறிவின் ஊற்றாக, அந்த மொழி பேசும் மக்களின்  வரலாறாக எல்லைகள் அற்று விரவிக் கிடக்கிறது.

"கிஷ்வாஹிலி" என்னும் ஆப்பிரிக்க மொழி எல்லைகளைக் கடந்து பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் பேசப்படுகிறது. இதை 2004-ல் ஆப்பிரிக்கக் கண்டத்து நாடுகள் தங்களின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தன.

இதைப் போலவே "க்யூசுவ" என்னும் மொழி தென் அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் எல்லைகளைக் கடந்து தாய்மொழியாக உள்ளது. நாடுகளிடையே அமைதிப் பேச்சு வார்த்தையை வழிநடத்த  எல்லையில்லா மொழிகள் உதவுகின்றன.

தற்போது உலகில் பேசும் மொழிகளாக 6,500 மொழிகள் இருக்கின்றன. இவற்றில் 43% மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. 2,000 மொழிகள் ஆயிரத்திற்கும் குறைவான மக்களால் பேசப்படுகின்றன. கல்வி கற்பிக்கும் மொழியாக சில நூறு மொழிகளே உள்ளன. கணினிமயமான மொழிகள் நூற்றுக்கும் குறைவாகவே உள்ளன. இரு வார காலம் கழியும்போது ஒரு மொழி அழிந்துவிடுகிறது.

தற்போது வாழும் மக்களில் 40% பேர் தங்கள் கல்வியைத் தாய்மொழி வாயிலாகக் கற்கமுடியாத நிலையில் உள்ளனர். உலக மக்கள் அனைவருக்கும் தொடக்கக் கல்வியைத் தங்கள் தாய்மொழியில் கற்கும் உரிமையை அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும். தாய்மொழியில் கற்றால்தான் பாடங்கள் மிக எளிதாகப் புரியும்.

"பாடங்கள் புரியாமல் கல்வி எவ்வாறு கற்க முடியும்?” என்ற அடிப்படைக் கேள்வியை யுனெஸ்கோவின் (UNESCO- United Nations Educational, Scientific, Cultural Organisation - ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு) உலக கல்வி கண்காணிப்பு அறிக்கை 2016 முன்வைக்கிறது.

இந்த அறிக்கை தொடக்கக் கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படவில்லை எனில் மொழிச் சிறுபான்மையினர் சமூகத்தின் மையத்தில் இருந்து விலகி விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவார்கள், குறிப்பாகப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என எச்சரித்துள்ளது.

இந்த சமூகம் நீடித்து நிலைத்திருக்க கலாச்சார பன்மைத்துவம், மொழியின் பன்மைத்துவம் அவசியம் என நம்புவதாக அறிக்கை கூறுகிறது. மொழி கலாச்சார பன்மைத்துவத்தைப் பேணிக் காப்பதே உலக அமைதிக்கான முன்நிபந்தனை என அறிவித்துள்ளது. இதுவே சகிப்புத்தன்மையையும், சக மனிதன் மீது வைத்திருக்கும் மரியாதையையும் அதிகரிக்கும்.

இன்று உலகம் முழுவதும் மொழிப் பன்மைத்துவம் மிகப் பெரிய ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகள் பல்வேறு மொழி பேசும் தங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மொழியின் வழியாகக் கல்வி கற்பிப்பதே இதற்கு முக்கிய காரணம்.

இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் யுனெஸ்கோ, “உலக தாய்மொழி நாள்” உலகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என 1999-ல் கோரிக்கை வைத்தது. இது பற்றி வங்கதேச அரசு நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் இயற்றி யுனெஸ்கோவிற்கு அனுப்பி வைத்ததே இதன் தொடக்கப் புள்ளியாகும்.

1948-ல் பாகிஸ்தான் அரசு உருது மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தது. இதற்கு வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான்-ஆக இருந்த வங்கதேசத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. தங்களின் தாய்மொழியான வங்க மொழியையும் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்க வேண்டுமென மக்கள் போராட தொடங்கினர்.  இதற்காக தீரேந்திரநாத் தத்தா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 1952, பிப்ரவரி 21 அன்று டாக்கா பல்கலைக்கழக மாணவர்களின்  போராட்டத்தை அடக்க பாகிஸ்தான் அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் சலாம், பரகத், ஜாபர், சப்யூர் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவாக “சாஹித் மினார்” என்னும்  நினைவகம் வங்கதேசத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தின் பயனாக 1956 ஆம் ஆண்டு முதல் வங்க மொழியும் அப்போதைய பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் பிப். 21 அன்று ஏராளமான வங்கதேச மக்கள், இந்த நினைவகத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். மொழிக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இவர்களின் நினைவாக “உலக தாய்மொழி நாள்” ஒவ்வோர் ஆண்டும் பிப். 21 அன்று கொண்டாடப்படுகிறது. பிப். 21 தேதியை வங்கதேச அரசு விடுமுறையாகவும்  அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவை, 2008 ஆம் ஆண்டை “உலக மொழிகளின் ஆண்டாக” அறிவித்தது 2019 ஆம் ஆண்டை “உலக பூர்வகுடிகளின் மொழி ஆண்டாக”ப்  பிரகடனப்படுத்தியது. வரும் 2022 - 2032 வரையிலான பத்து ஆண்டுகளை பூர்வகுடிகளின் மொழிகளைப் பாதுகாக்கும் ஆண்டுகளாக அறிவிக்கவுள்ளது.

சமூகமாக வாழும் எல்லா உயிரினங்களும் தங்களுக்குள் தொடர்புகொள்ள சில சமிக்ஞைகள், சில ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. பரிணாம வளர்ச்சியில் மனிதனின் மூளையில் மொழிக்கு என்றே தனி இடங்கள் உருவாகின. மனிதனின் தொண்டையும் பெரிய ஒலிகளை எழுப்புவதற்குத்  தகுந்தவாறு மாறிக்கொண்டது.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுகளாக மனிதன் பேசும் மொழியைப்  பயன்படுத்தி வருவதாகத் தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். எழுத்து வடிவத் தொல்லியல் சான்றுகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை வரை தற்போது  கிடைத்துள்ளன.

உலக மொழிகள் 135 பூர்வகுடும்பங்களைச் சார்ந்தவை. தற்போது வாழும் பெரும்பாலான மக்கள் பேசும் மொழிகள் எட்டு பூர்வீக மொழிக் குடும்பங்களைச் சார்ந்தவை.

உலகின் மிகப் பழமையான பத்து மொழிகளில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியில்  மட்டுமே இன்றும் அதனுடைய எழுத்து வடிவத் தொடர்ச்சி உள்ளது.

உலகின் பழைமையான பத்து மொழிப் பட்டியலிலும், உலக மக்கள் அதிகம் பேசும் முதல் 20 மொழிப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ள ஒரே பூர்வகுடி மொழியாகத் தமிழ் மொழி திகழ்கிறது.

இந்தியாவில் பேசும் மொழிகளாக 780 மொழிகள் இருக்கின்றன. அதிக நபர்களால் பேசப்படும் முதல் 20 மொழிகளில் தமிழ் இருக்கிறது. உலகில் அதிக மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது.

உலகின் அதிக மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடாக "பப்பு நியூ கினியா" உள்ளது. 86 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் 839 மொழிகள் பேசப்படுகின்றன. உலகில் அதிகமான நபர்களால் பேசப்படும் மொழியாக “மாண்டரின் - சீன மொழி” உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த ஒரு மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 8-வது அட்டவணையில் 22 தேசிய மொழிகளை அங்கீகரித்துள்ளது.

இந்திய மொழிகளில் செம்மொழியாகத் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த செம்மொழிகளில் சமஸ்கிருதம் மட்டுமே 20ஆயிரத்திற்கும் குறைவான மக்களால்  பேசப்படும் மொழியாக உள்ளது. பத்தாயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பேசும் மொழிகளாக இந்தியாவில் 121 மொழிகள் இருக்கின்றன.

இந்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்துச் செம்மொழிகளையும் வளர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும். செம்மொழிகளை மட்டுமல்லாமல் மக்கள் பேசும் அனைத்து மொழிகளையும் காக்க வேண்டும். இந்தியாவில் பேசப்படும் பல மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. இந்த மொழிகளைப்  பாதுகாக்க இவற்றுக்கு எழுத்து வடிவத்தை உருவாக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக 643.84 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு, இந்தக் காலகட்டத்தில் தமிழ் மொழிக்கு வெறும் 22.94  கோடியே ஒதுக்கியுள்ளது. இது மத்திய அரசின் ஓர வஞ்சனையைக் காட்டுவதாகத்தான் கருதப்படும்.

ஒரு மொழி வளமானதாக இருக்க அந்த மொழி அனைத்து விதமான அறிவியல் தொழில்நுட்ப, கலை, பண்பாட்டு, கலாச்சார நுட்பங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும்.

அந்த மொழி பேசும் மக்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழிக் கல்வி கொடுக்க வேண்டும். அந்தப் பகுதியின் நிர்வாக, அலுவல்,  நீதிமன்ற, தொடர்பு மொழியாகத் தாய்மொழியே இருக்க வேண்டும்.

தமிழ் மொழியைக் காக்க பாரதி  தெரிவித்த யோசனைகளை யுனெஸ்கோ உலகம் முழுவதும் உள்ள மொழிகளைக்  காக்க  பயன்படுத்த வேண்டும். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் உள்ள கலைச்செல்வங்கள்,  அறிவியல் தொழில்நுட்பங்கள், அனைத்தும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். புதிய புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், அவரவர் தாய்மொழியில் இயற்றித் தாய்மொழி காக்கப்பட வேண்டும்.

கொண்டாடுவதற்கு மட்டும் அல்ல தாய்மொழி நாள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com