நாட்டறம்பள்ளி அருகே மர்மமான முறையில் இரண்டு குழந்தைகள் பலி

நாட்டறம்பள்ளி அருகே மர்மமான முறையில் ஓரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறந்தனர்.
நாட்டறம்பள்ளி அருகே மர்மமான முறையில் இரண்டு குழந்தைகள் பலி

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அம்மணாங்கோயில் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ்(34). இவரது மனைவி பிரியா(30). இந்தத் தம்பதியினருக்கு ஜெயஸ்ரீ(5), தனுஸ்ரீ(3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சுரேஷ் உணவு கடையில் வாங்கி வந்த உணவு பொருட்களை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விட்டு உறங்கிவிட்டனர். பின்னர் வழக்கம் போல் இன்று காலை வீட்டில் செய்திருந்த காலை உணவை சாப்பிட்ட 2 குழந்தைகளும் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பிற்பகல் 12 மணியளவில் குழந்தை ஜெயஸ்ரீக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தாள். இதனையறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆபத்தான நிலையில் இருந்த ஜெயஸ்ரீயை புதுப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் உடனே குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜெயஸ்ரீ உயிரிழந்தார்.

இதனால் சோகமடைந்த பெற்றோர் இறந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்து வந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கமால் உறவினர்களுக்கு மட்டும் தகவல் தெரிவித்திருந்தனர். 

அப்போது மற்றொரு குழந்தை தனுஸ்ரீக்கும் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தாள். உடனே உறவினர்கள் தனுஸ்ரீயை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அங்கு தனுஸ்ரீயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பிறகு வீட்டிலிருந்த இறந்த குழந்தை ஜெயஸ்ரீயின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் இரண்டு குழந்தைகளும் நேற்றுமுன்தினம் இரவு உணவு பொருட்கள் சாப்பிட்டதால் புட்பாயிஷன் ஏற்பட்டு இறந்தார்களா? அல்லது வேறு காரணங்களால் இறந்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் திருநாளில் ஒரே குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இறந்ததால், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com