பொன்னேரி: மீஞ்சூர் அருகே அதிமுக கிளை செயலர் இன்று (வெள்ளிக்கிழமை) மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
மீஞ்சூர் காவல் நிலைய எல்லைகுட்பட்ட வாயலூர் கிராமத்தில் வசிப்பவர் சிலம்பரசன்(32) இவர் வாயலூர் அதிமுக கிளைக் கழக செயலலராக இருந்து வருகிறார். இவர் வாயலூர் ஊராட்சியில் உள்ள ஊரணம்பேடு கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்களால் சராமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த சிலம்பரசனை அப்பகுதி மக்கள் மீட்டு மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீஸார் சிலம்பரசன் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதிமுக கிளை செயலரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.