திருப்பரங்குன்றம்: மதுரைத் திருப்பரங்குன்றம் பகுதியில் காயமடைந்த குரங்குக் குட்டி சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், அது இருந்த பகுதியிலே தாய்க் குரங்கு முன்னிலையில் வனத் துறையினர் சிகிச்சையளித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரங்குகள் இருக்கின்றன. அவ்வப்போது குரங்குகளுக்கு இடையே ஏற்படும் சண்டைகள், மரத்தில் இருந்து தவறி விழுவது போன்றவற்றால் காயம் ஏற்படும் குரங்குகளுக்கு வனத் துறையினர் சிகிச்சையளித்து பின்பு மீண்டும் அவை இருந்த பகுதிகளில் விடுவது வழக்கம்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரும் குட்டி குரங்கு ஒன்று திருப்பரங்குன்றத்தில் காயத்துடன் காணப்பட்டது. இதனையறிந்த வனத் துறையினர் குரங்கைப் பிடித்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
தாயிடமிருந்து பிரிக்கப்பட்டதால் குட்டி குரங்கு சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தராமலும், உணவு உண்ணாமலும் இருந்தது.
இதையடுத்து வனத் துறையினர் குரங்கு இருந்த இடத்திற்கே கொண்டுவந்து கூண்டில் அடைத்து வைத்து, அந்தக் குட்டிக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து இரு நாள்கள் சிகிச்சையளித்தாலே குரங்கு குணமடைந்துவிடும் என வனத் துறையினர் தெரிவித்தனர். குரங்கை வனத்துறை அலுவலர் முருகேசன் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
மேலும் கூண்டில் அடைபட்ட குட்டிக் குரங்குக்கு பாதுகாப்பாக தாய்க் குரங்கு உள்ளிட்ட பல குரங்குகள் உடனிருக்கின்றன.
தாய் அருகில் இருப்பதால் குட்டி குரங்கு தற்போது சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், உணவு மற்றும் மருந்துகளைச் சரியாக உட்கொண்டு வருவதாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர்.