புது தில்லி: கரோனா நோய்த் தொற்றின் தோற்றம் பற்றியும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அறிவதற்காக அடுத்த வாரத்தில் உலக சுகாதார அமைப்பின் குழுவொன்று சீனாவுக்குச் செல்கிறது.
சீனாவில் வூஹானில் தோன்றிப் பரவிய கரோனா தொற்று பற்றிய விவரங்களைத் தருவதைத் தொடர்ந்து சீனா தாமதித்துவரும் நிலையில் இந்தக் குழு செல்லவிருக்கிறது.
"நிமோனியா தொற்று" பற்றி உலக சுகாதார அமைப்புக்கு வூஹான் மாநகர சுகாதாரக் குழு அறிக்கையளித்து, ஏறத்தாழ 6 மாதங்களுக்குப் பிறகு சீனாவுக்குக் குழு செல்கிறது.
கடந்த ஜனவரி மாதத்தில், "இயன்றவரையில் விரைவாக" பன்னாட்டு நிபுணர் குழுவொன்று சீனாவுக்குச் செல்லும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்திருந்தார்.
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கரோனா நோய்த் தொற்றின் தோற்றம் பற்றி "விரிவான ஆய்வு" மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் முதன்மை அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.