திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் முதியவர் ஒருவர் பலியானாா்.
திருப்பத்தூர் அடுத்த கொரட்டி சேர்ந்த 73 வயது அர்ச்சகர். இவர் சில நாள்கள் உடல் நலிவுற்றதால் வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிவில் அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதையடுத்து அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர் திரும்பி உள்ளார்.
இன்று காலை அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனையிலிருந்து வெளியான கணினி தகவலில் பதிவாகி இருந்தது. அதையடுத்து முதியவர் வசிக்கும் கொரட்டிக்கு சென்ற வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் அவரை கொரட்டி அடுத்த குனிச்சி சமுதாய சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அவருக்கு கரோனா தொற்று பரிசோதிக்கபட்டது. பரிசோதனை செய்யும் நிலையிலேயே அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மாரடைப்பில் அங்கேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள் உத்தரவின் பேரில் அவரது சடலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு நகராட்சி அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி பிரதான சாலையில் உள்ள மயானத்தில் நகராட்சி, சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் அவரது சடலம் எரிக்கப்பட்டது.