காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் நகரில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெளிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கிலும் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை காணமுடிந்தது. காஞ்சிபுரத்தின் பிரதான சாலைகளான காந்தி சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், வேன்கள் ஆகியன விதிமுறைகளை மீறி சென்று கொண்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் 442 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 6796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.
முழுபொது முடக்கத்திலும் காஞ்சிபுரத்தில் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வந்தன. சில இடங்களில் இறைச்சி கடைகளும் இயங்கி வருகின்றது.
கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அறிவித்திருந்தும் மக்களும் அதை கடைபிடிக்க வில்லை. மக்கள் பொது முடக்கத்தை முறையாக கடைபிடித்தால் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும் என காஞ்சிபுரம் பகுதி மக்கள் தெரிவித்தனர்.