கொலை செய்யப்பட்டார் ஜார்ஜ் ஃபிளாய்ட்: உடற்கூறு அறிக்கை
அமெரிக்காவே பற்றியெரியக் காரணமான ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் ஒரு கொலைதான், அவருடைய இதயம் நின்று மரணம் நேரிட்டுள்ளது என்று உடற்கூறு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் ஃபிளாய்டைத் தடுத்துக் கீழே தள்ளி அவருடைய கழுத்தில் அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் முழங்காலை வைத்து அழுத்தியதில் இந்த மரணம் நேரிட்டுள்ளது என்றும் ஃபிளாய்டுக்கு ஏற்கெனவே இதய நோயும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கும் பரவி மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ள அந்த விடியோ காட்சியிலுள்ளவாறு, பிளாய்ட் கழுத்தை அழுத்தியதில் சுவாசிக்க முடியாமல்போய் இதயம் நின்றுவிட்டதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
பிளாய்டின் மரணத்துக்குக் காரணமான காவல்துறை அதிகாரியின் மீது மூன்றாம் நிலையிலான கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மற்ற மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பிளாய்ட் தாக்கப்பட்ட சம்பவத்தை முழுவதுமாக அந்தப் பகுதியிலிருந்தவர்கள் தங்கள் செல்லிடப்பேசிகளில் விடியோ எடுத்துள்ளனர். பிளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து, டெரக் சாவின் என்ற அதிகாரி அழுத்தியபோது மூச்சுவிட முடியாமல், தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று கதறுகிறார் பிளாய்ட்.
பிளாய்ட் குடும்பத்தினர் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில், கழுத்துப் பகுதி மற்றும் முதுகுப் புறம் அழுத்தப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் பிளாய்ட் இறந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழுத்தை டெரக் சாவின் அழுத்திக்கொண்டிருந்தபோது, முதுகுப் பகுதியையும் மற்ற காவலர்கள் அழுத்தியதால் மூச்சுவிட முடியாமல் மரணம் நேரிட்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெரக் சாவின் மீது முதல்நிலைக் கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும் அவருடன் சேர்ந்த பிளாய்டின் பின்புறத்தை அழுத்திய மற்ற மூன்று காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிளாய்டின் குடும்ப வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் ஏற்பாட்டில் நடத்திய சோதனையில், அவருக்கு எந்தவித இதயக் கோளாறும் இல்லை, நலமாகவே இருந்திருக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.