அரசின் பல்வேறு துறைகள் வழியாகத் தன்னை அச்சுறுத்துவதன் மூலம் அதன் நேரத்தை உத்தரப் பிரதேச அரசு வீணடித்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தாம் இந்திரா காந்தியின் பேத்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கான்பூர் அரசு சிறுமிகள் இல்லத்தில் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக முகநூலில் பிரியங்கா தெரிவித்துள்ள கருத்துக்குத் திருத்தம் வெளியிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உ.பி. அரசு நோட்டீஸ் அளித்துள்ளது.
மக்கள் ஊழியர் என்ற வகையில் உத்தரப் பிரதேச மக்களின் முன் உண்மையை வைக்கிறேன். இதுவொன்றும் அரசு பிரச்சாரமல்ல. என்னை அச்சுறுத்துவதன் மூலம் நேரத்தை உ.பி. அரசு வீணாக்கிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா.
சில எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல தாம் ஒன்றும் அறிவிக்கப்படாத பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் அல்ல என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா, தாம் தொடர்ந்து உண்மையைச் சொல்லிக்கொண்டிருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
"சொல்லப்போனால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதைச் செய்யுங்கள். நான் உண்மையை முன்வைத்துக்கொண்டுதான் இருப்பேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி" என்றும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.