களக்காட்டில் சித்த மருத்துவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டது.
களக்காட்டில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவருக்கு சில தினங்களுக்கு முன் கரோனா அறிகுறி தென்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மருத்துவர் தானாகவே முன்வந்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மருத்துவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் களக்காட்டில் அவர் நடத்தி வந்த மருத்துவமனை மூடப்பட்டதுடன், அங்கும், அவர் வசித்து வந்த கோவில்பத்து பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சித்த மருத்துவர் எலும்பு முறிவு சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார். குறிப்பாக களக்காடு சுற்றுவட்டாரத்தில் உள்ள செங்கல்சூளைகளில் ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவருமே இந்த சித்த மருத்துவமனையில் தான் சிகிச்சைக்காக வந்து செல்வர். அவர்கள் யாரிடமிருந்தாவது மருத்துவருக்கு தொற்று பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.