கும்பகோணம்: கும்பகோணம் அருகே மடத்தின் பொறுப்பாளர் செவ்வாய்க்கிழமை இரவு அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் வடக்கு மட விளாகத்தைச் சேர்ந்தவர் கோபாலன் (75).
ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் நாச்சியார்கோவில் பகுதியில் உள்ள அபிநவதீர்த்தர் மடத்தில் பொறுப்பாளராக இருந்து வந்தார். இவருடன் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஏற்பட்ட தகராறில் கோபாலன் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில், பலத்தக் காயமடைந்த கோபாலன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடைப் பிரச்னை தொடர்பாக இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிலரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். கோபாலனின் மகன் வாசுதேவன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முன்னாள் மண்டலப் பொறுப்பாளராக இருந்தார்.