கேரளத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம், இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் குமுளி அருகே புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில், தனியார் ஏல நிறுவனங்கள் மூலம் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நடைபெறும். இந்த நிலையில், புத்தடியில் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏலக்காய் ஏல மையத்தில் 100-க்கும் மேற்பட்ட கேரள, தமிழக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்வதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று நறுமணப் பொருள் வாரிய அலுவலர்கள் கூறினர்.
போடியிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏலக்காய் ஏல வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழக ஏலக்காய் வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவு பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஏலக்காய் மின்னணு ஏலம் நிறுத்தப்பட்டுள்ளதால், நாளொன்றுக்கு ரூ.16 கோடி மதிப்பில் வர்த்தகம் முடங்கியுள்ளது.