பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை டன் போதைப் பாக்கு பறிமுதல்: போலீஸார் விசாரணை

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை டன் போதைப் பாக்கை போலீஸார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை டன் போதைப் பாக்கை போலீஸார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் அகஸ்தியர் தெருவில் ஒரு வீட்டில் போதைப் பாக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்றனர். அப்போது அந்த வீட்டின் முன்பு ஒரு வேனில் இருந்து அட்டை பெட்டிகளை சிலர் இறக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள், போலீஸாரை பார்த்தும் தப்பியோடினர். அதில் இருவர் மட்டும் சிக்கினர். மேலும் போலீஸார், அங்கிருந்த பெட்டிகளை சோதனை செய்ததில் அந்த பெட்டிகளில் போதைப் பாக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட கொடுங்கையூர் எழில்நகர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன், பொன்ராஜ்  ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் அங்கு வேலை செய்து வருவதும், பெங்களூருவில் இருந்து போதைப் பாக்கு கடத்திக் கொண்டு வந்து, சென்னை முழுவதும் விற்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீஸார், அங்கிருந்த ஒன்றரை டன் போதைப் பாக்கை பறிமுதல் செய்தனர். அதேவேளையில் இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com