திருப்பூர் மாவட்டத்தில் குடையுடன் வரும் நபர்களுக்கே மதுபானம் விற்பனை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் வரும் வியாழக்கிழமை (மே 7) முதல் சில கட்டுப்பாடுகளுடன் மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன.
இதில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக் கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உள்பட்டு திறக்க அனுமதி அளிக்கப்படுகின்றன.
இதில், மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நபருக்கும், மற்றொரு நபருக்கும் உள்ள இடைவெளி 6 அடி தூரமாக இருக்க வேண்டும். மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. மேலும், மதுபானக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும். அதே வேளையில், சமூக இடைவெளியை தீவிரமாக கடைப்பிடிக்கும் வகையில் மதுபானக் கடைகளுக்கு வருபவர்கள் தவறாது குடையுடன் வர வேண்டும். குடையுடன் வராதவர்களுக்கு மது பானங்கள் விற்பனையில்லை.
மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் தனிநபர் சுத்தம் பேணப்படுவதோடு மதுபானக்கடை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும், பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முகக் கவசம மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உள்பட்டு மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.