உதறிவிட்ட தந்தை, ஊதியம் பறித்த கரோனா, புற்றுநோயாளியான தாயைக் காக்க பசியுடன் போராடும் சிறுமி!

ராமநாதபுரத்தில் குடும்பத்தை உதறிவிட்டுத் தந்தை போய்விட, ஊதியத்தைக் கரோனா பறித்துக்கொள்ள புற்றுநோயாளியான தாயைக் காக்கப் பசியுடன் போராடிக் கொண்டிருக்கிறார் ஒரு சிறுமி.
உதறிவிட்ட தந்தை, ஊதியம் பறித்த கரோனா, புற்றுநோயாளியான தாயைக் காக்க பசியுடன் போராடும் சிறுமி!


ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் குடும்பத்தை உதறிவிட்டுத் தந்தை போய்விட, ஊதியத்தைக் கரோனா பறித்துக்கொள்ள புற்றுநோயாளியான தாயைக் காக்கப் பசியுடன் போராடிக் கொண்டிருக்கிறார் ஒரு சிறுமி.

ராமநாதபுரத்தில் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி முத்துவேலாயி. இவர்களுக்கு ஷர்மிளா (17) என்ற மகளும், அபி என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டு மகனையும் அழைத்துக்கொண்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டார்.

மகள் ஷர்மிளாவுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வரும் முத்துவேலாயி, கூலி வேலை செய்து மகளுடன் அன்றாட பசியை ஆற்றி வந்தார். இடியென வந்தது, முத்துவேலாயிக்கு வாய்ப் புற்றுநோய். நோயால் அவர் கூலி வேலைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

தாயின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தாயையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டி, கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்தவுடன் பிளாஸ்டிக் பொருள்கள் விற்கும் தனியார் கடைக்கு வேலைக்குச் சென்றார் ஷர்மிளா.

ஷர்மிளாவுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் ஊதியம். இந்த ஊதியத்தில்தான்  வீட்டு வாடகை, அரசின் குடும்ப அட்டைக்கான அரிசி, தாய்க்கு மருந்து, மாத்திரை என வாங்கிச் சமாளித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்தான் எதிர்பாராத கரோனா ஊரடங்கு வந்தது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால்,  கடைகள் அடைக்கப்பட ஷர்மிளாவும் வேலையிழந்தார்.

கடந்த இரு மாதங்களாக வேலையின்றித் தவிக்கும் ஷர்மிளாவுக்கு உதவ உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. அக்கம்பக்கத்தினர் இரக்கப்பட்டு அவ்வப்போது அரிசி, காய்கறிகளை கொடுத்து உதவினர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தாய்க்கு சிகிச்சை பார்த்துவந்த  நிலையில், நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் கைவிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து தாயை வீட்டுக்கு அழைத்து வந்த சிறுமி, ஒருபுறம் வருவாய் இழந்து வயிற்றுக்குப் போராடிக்கொண்டே தாயின் நோயைத் தீர்க்க மருத்துவ உதவி கேட்டும் மாவட்ட நிர்வாகத்தின் படியேறி வருகிறார்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் மாவட்ட ஆட்சியர் யாரையும் சந்திக்க முடியாத நிலையில் தினமும் ஆட்சியைரைப் பார்க்க அலுவலக படியோரம் காத்துக் கிடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்தச் சிறுமி ஷர்மிளா.

ராமநாதபுரம் நகர் பகுதியிலிருந்து தினமும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து, உதவி கிடைக்குமா என ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து வந்து  செல்வதை  ஷர்மிளா வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பகல் வரை ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க காத்திருந்த சிறுமி மயக்க நிலையில் இருந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவருக்கு பசியாற உதவினர். எனினும், உதவி எதுவும் பெற முடியாத நிலையில் நடந்தே வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் அவர்.

மனைவியுடன் மகளையும் கைவிட்டுச் சென்றுவிட்டார் பெற்ற தந்தை,  கரோனா கொடுமையால் இருக்கிற வேலையும் வருமானமும்  போய்விட்ட நிலையில், தாயையும் மகளையும் பசியும் வந்து பற்றிக் கொண்டுவிட்டது. வீட்டுக்கு வாடகை கொடுப்பதும் குதிரைக் கொம்பாகிவிட்டது.

புற்றுநோயில் உழலும் தாய்க்கு எங்கே மருந்து வாங்குவது, எப்படி காப்பாற்றுவது எனத் தெரியாமல், பட்டினியாகத் தனது தாயின் நோயைத் தீர்க்க மருத்துவ உதவி கோரி மாவட்ட நிர்வாகத்தின் படியேறி இறங்கிக்  கொண்டிருக்கிறார்.

ஒற்றைப் பிடியாக இருக்கும் தாயின் உடல்நிலையும் வாய்ப் புற்றுநோயால் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்க, யார் உதவுவார்கள், தாயின் நோயுடன் தங்கள் பசிப் பிணியும் தீருமா எனக்  கண் முன்னே இருண்டுகொண்டிருக்கும் எதிர்காலத்தை நினைத்துக் கலங்கிக் கொண்டிருக்கிறார் சிறுமி ஷர்மிளா. (ஷர்மிளாவின் செல்லிடப்பேசி எண்: 6383210552).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com