வேதாரண்யம் : மறைந்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் பாவலர் க. மீனாட்சிசுந்தரத்தின் உடல், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தை நிறுவி, தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்ததுடன், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டு வந்த மீனாட்சிசுந்தரம், உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
இவரது உடல், மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தலைஞாயிறிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
தனது மறைவுக்கு பின்னர் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்ய ஏற்கெனவே மீனாட்சிசுந்தரம் விருப்பம் தெரிவித்துப் பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து, சடங்குகள் தவிர்க்கப்பட்டு, இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து, தலைஞாயிறு கடைவீதியில் வைக்கப்பட்ட அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்யும் விதமாக அமரர் ஊர்தியில் மீனாட்சிசுந்தரத்தின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது.