சென்னை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூடைகள் மழையில் நனைந்து வீணாவது தொடர்பான விவகாரத்தை நாளிதழில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் காணொலி காட்சி மூலம் பொதுநல வழக்குகளை விசாரித்தனர். அப்போது, விவசாயிகள் தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவசாயிகளிடமிருந்து வேளாண் விளை பொருள்களை கொள்முதல் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். மேலும் மதுராந்தகம் ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை. இதனால் நெல் மூடைகள் மழையில் நனைந்து வீணாகி போவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருந்தது. எனவே, இந்த செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.
மேலும் விவசாய வேளாண் விளை பொருள்கள் பொதுமுடக்க காலத்தில் எவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டன. கொள்முதல் செய்யப்பட்ட பொருள்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (மே 22) ஒத்திவைத்தனர்.