வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி கிராமத்தில், வெள்ளிக்கிழமை இரவு, இடி விழுந்ததில், புளியமரம் தீப்பற்றி எரிந்தது. மரத்திற்குக் கீழே அடியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தென்னங்கீற்றுகளும் எரிந்துநாசமானது.
வாழப்பாடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 6.30 மணி முதல் 7.10 வரை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது பொன்னாரம்பட்டி கிராமத்தில், சாலையோரத்தில் இருந்த, 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் மீது, இடி விழுந்ததில் தீப்பற்றி எரிந்தது.
மரத்திற்கு அடியில் கூலித்தொழிலாளர்கள் முடைந்து அடுக்கிவைத்திருந்த நூற்றுக்கணக்கான தென்னங்கீற்றுகளும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்து, குடியிருப்பு பகுதிகளுக்குத் தீ பரவாமல் தடுத்தனர்.