கூடலூரில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் வீணாகும் குடிநீர்
கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், லோயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கூடலூர் நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது சில நாள்களாக நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அடிக்கடி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூடலூர் குமுளி நெடுஞ்சாலையில், தனியார் பள்ளி அருகே, கூலிக்காரன் பாலத்தை ஒட்டி கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் மூலம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்பு பெரிதாகி குழாய் மூலம் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. உடைந்து பல நாள்களாகியும் குழாய் உடைப்பை சரிசெய்யாமல் வடிகால் வாரியத்தினர் மெத்தனமாக உள்ளனர்.
குடிநீர் வடிகால் வாரியத்தினரிடமும், நகராட்சி பொறியாளரிடமும் நேரிலும், செல்லிட பேசியிலும் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் குடி வீணாகும் குடி நீரை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.