மானாமதுரை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்:  ஆடி மாதம் பிறப்பால் விலை அதிகரிப்பு

ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு வழக்கமான விற்பனையை விட  ஆடுகளின் விற்பனை அதிகரித்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
மானாமதுரையில் வியாழக்கிழமை நடந்த சந்தையில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு வழக்கத்தைவிட கூடுதலாக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
மானாமதுரையில் வியாழக்கிழமை நடந்த சந்தையில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு வழக்கத்தைவிட கூடுதலாக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு வழக்கமான விற்பனையை விட  ஆடுகளின் விற்பனை அதிகரித்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டத் தொடங்கிவிடும். கிராமங்களில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

இந்த விழாக்களின் போது மக்கள் ஆடு, கோழிகளை தெய்வங்களுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

மேலும் ஆடிமாதம் பிறப்பின்போது ஆட்டு இறைச்சிக்கு கடும் கிராக்கி ஏற்படும். இதனால் ஆடி மாதத்தில் ஆடு, கோழிகளின் விலை வழக்கத்தைக் காட்டிலும் உயர்த்தி விற்கப்படும்.

மானாமதுரையில் ஒவ்வொரு வாரமும்  ஆட்டுச் சந்தை நடைபெறும். வியாழக்கிழமை தடையை மீறி நடந்த ஆட்டுச் சந்தைக்கு வழக்கமாக விற்பனைக்கு கொண்டு வரும் ஆடுகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பதற்காக கொண்டு வரப்பட்டன.

ஆடு வளர்ப்பவர்கள் வேன், பைக்குகள், ஆட்டோக்களில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு  பேரூராட்சி அலுவலகம் எதிரே சந்தை கூடும் இடத்திற்கு அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து கூடிவிட்டனர்.

இதனால் அந்த இடத்தில் ஆடுகள் விற்க, வாங்க வந்தவர்கள், வியாபாரிகள் என கூட்டம் அதிகமாக இருந்தது.

இவர்கள் கரோனா பரவல் பற்றி அச்சப்படாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் ஆடு விற்பனையில் மும்முரமாக இருந்தனர்.

பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆட்டுச்சந்தை அனுமதி நடத்த இல்லை. கூட்டம் கூடக் கூடாது கலைந்து செல்லுங்கள். இல்லையென்றால் ஆடுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்வார்கள் என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் ஆடு விற்பனையில் ஆர்வமாக இருந்தவர்கள் இந்த அறிவிப்பை எல்லாம் கண்டுகள்ளவில்லை.  ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விலையும் வழக்கத்தைக் காட்டிலும் உயர்த்தி விற்கப்பட்டது.

வெள்ளாடு, செம்மறி, குரும்பை என ஆடுகளின் வகைக்கும், அவற்றின் எடைக்கும் ஏற்றவாறு  விலைகளும் ரூபாய் 8000 முதல் ரூபாய் 35 ஆயிரம் வரை உயர்த்தி விற்கப்பட்டது.

ஆடுகளை வாங்குவதற்கு சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் சந்தையில் குவிந்திருந்தனர்.

மானாமதுரையில் காலை 5 மணியிலிருந்து 9 மணி வரை நான்கு மணி நேரம் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில்  பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com