புது நோயாளிகள் இல்லை: படியூரில் கரோனா சிகிச்சை மையம் மூடல்
காங்கயம்: காங்கயம் அருகே, படியூரில் அமைக்கப்பட்டிருந்த கரோனா சிகிச்சை மையத்தில் அனைவரும் குணமடைந்து சென்றதால், இந்த சிகிச்சை மையம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.
காங்கயம் ஒன்றியம், திருப்பூர் சாலையில் உள்ள படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கரோனா சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. 10 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை உள்பட இங்குள்ள 60 படுக்கைகளில் இதுவரை 200 நோயாளிகள் சேர்க்கப்பட்டு, குணமடைந்துள்ளனர். கடைசியாக இங்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து, சனிக்கிழமை அவர்களது வீடுகளுக்குத் திரும்பினர்.
இதன் பின்னர் புது நோயாளிகள் யாரும் வராததால், ஞாயிற்றுக்கிழமை இந்த மையம் மூடப்பட்டதாக இப்பகுதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இங்கு சிகிச்சை பெற்று வந்த 200 நோயாளிகளுக்கும் உணவு, சிற்றுண்டி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட வசதிகளை தனது சொந்தப் பொறுப்பில் செய்து கொடுத்த படியூர் ஊராட்சித் தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரத்துக்கு நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பாராட்டுத் தெரிவித்தனர்.