27வது முறையாக 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது.
27வது முறையாக 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும்  உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இவ்வாறு திறந்துவிடப்படும் வெள்ளநீர் பவானிசாகர் அணையில் கலப்பதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது. 

தமிழக அரசின் பொதுப்பணி அணைகளின் விதித்தொகுப்பு படி ஜூலை மாதம் 100 அடிக்கு மேல் வெள்ளநீரை தேக்கி வைக்க இயலாது என்பதால் அணைக்கு வரும் 5400 உபரிநீர் அப்படியே ஆற்று மதகில் திறந்துவிடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வருவாய் மற்றும் காவல்துறை சார்பில் ஆற்றில் துவைக்கவே, குளிக்கவோ கூடாது என்றும் தாழ்வான பகுதியில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

1955ஆம் ஆண்டு கட்டப்பட்ட பவானிசாகர் அணையில், 27வது முறையாக அணை 100 அடியை எட்டியுள்ளது. கடந்த 2018ஆம் முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக 100 அடியை தொட்டதும் குறிப்பிடத்தக்கது. அணையின் குறுக்கே புதியதாக கட்டப்படும் உயர்மட்ட பாலத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் வெள்ள நீர் வெளியேற்றதால் பாதிப்புகள் ஏற்படாது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். 

அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் இந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பாகவே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அணை 100 அடியை தொட்டதால் நீர்ப்பிடிப்பு பகுதி கடல்போல காட்சியளிக்கிறது.  

தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடி, நீர்வரத்து 4000 கனஅடி, நீர் வெளியேற்றம் 900 கனஅடி மற்றும் நீர் இருப்பு 28.65 டிஎம்சி ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com