சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வாரச்சந்தை தினமான வியாழக்கிழமை கூட்டம் கூடுவதை தவிர்க்க போலீசார் காய்கறி வியாபாரிகளை விரட்டியடித்தனர்.
மானாமதுரையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அப்போது சுற்றுவட்டார கிராம மக்கள் மானாமதுரைக்கு வந்து காய்கறி உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் செல்வார்கள்.
தற்போது பொது முடக்கம் காரணமாக வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் தடையை மீறி காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல பொருள்களை மானாமதுரைக்கு கொண்டுவந்து சந்தை கூடும் பகுதியில் வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
இதனால் வியாழக்கிழமை தோறும் பொருள்களை வாங்க வந்த மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மானாமதுரை பகுதியில் காரோனா தொற்று வேகமாக பரவும் நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து வாரச்சந்தை கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து வாரச்சந்தை தினமான இன்று மானாமதுரை நகருக்குள் பொருள்களை விற்பனை செய்ய வரும் விவசாயிகள், வியாபாரிகள் அவர்களை நுழையாமல் இருப்பதற்காக ஊர் எல்லைப் பகுதியில் பல இடங்களிலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டனர்.
காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட பொருளகளுடன் சந்தைக்கு வியாபாரம் செய்யும் நோக்கத்தில் வந்த விவசாயிகள் வியாபாரிகளை போலீசார் மறித்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் சில வியாபாரிகள் வாகனங்களில் தக்காளி, வெங்காயம், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை மானாமதுரை நகருக்கு வெளியே தாயமங்கலம் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் வைத்து வியாபாரம் செய்தனர்.
இதை அறிந்து அந்த இடங்களுக்குச் சென்ற போலீசார் வியாபாரிகளை வாகனங்களை எடுத்துக்கொண்டு இடத்தை காலி செய்யுங்கள் எனக் கூறி விரட்டியடித்தனர்.
இதனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மானாமதுரையில் வாரச்சந்தையில் கூடும் மக்கள் கூட்டம் போலீசார் முயற்சியால் தடுக்கப்பட்டது.