கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பிணவறையில் அழுகும் சடலங்கள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறையில் உள்ள கேட்பாரற்று கிடக்கும் இரண்டு சடலங்கள் யாரும் உரிமை கொண்டாட நிலையில் அழுகும் நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து தற்கொலை போன்ற காரணங்களாக தினசரி பத்து சடலங்கள் கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை செய்வது வழக்கம். தற்போது கரோனா தொற்று காரணமாக, இதன் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சூளகிரி மற்றும் காவிரிபட்டணத்தைச் சேர்ந்த கரோனா தொற்றாளர்கள் என சந்தேகப்படும் இருவர், உயிரிழந்தனர். கரோனா தொற்றாளர்கள் என சந்தேகம் இருந்ததால், இவர்களின் சடலங்களை உறவினர்கள் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக பிணவறையில் இருக்கும் இந்த சடலங்கள் அழுகி துர்நாற்றம் வீசும் நிலையில் இருப்பதாக தெரிகிறது.
பிணவறையில் எத்தனை சடலங்கள் உள்ளன, எத்தனை சடலங்கள் உறவினர்கள், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன, சடலங்கள் எத்தனை இருக்கின்றன போன்ற விவரங்களை கொண்ட பதிவேடு பராமரிக்கப் படுவதில்லை, மருத்துவ துறை, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவைகள் ஒருங்கிணைந்து செய்யப்படாததால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள புறநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள், இந்த சடலங்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. மேலும், வருவாய்த்துறையினர் இந்த சடலங்களை அடக்கம் செய்து விட்டதாக தவறாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சவக்கிடங்கில் கிடைக்கும் இந்த சடலங்களை நகராட்சியிடம் ஒப்படைத்து இறுதி மரியாதை செய்ய மருத்துவத் துறை, காவல்துறை முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் சவக்கிடங்கு குளிர்சாதன வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.