தாம்பரம்: கொச்சியில் மூளைச்சாவு அடைந்த 30 வயது இளைஞரின் இதயம் ஒரு மணி நேரம் 5 நிமிடத்தில் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அங்கு 51 வயது நபருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
கொச்சியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் கடந்த 19ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கும், இதர உடல் உறுப்புகள் கேரள மாநில மருத்துவமனைகளுக்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்டன.
குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஆறுமுகம் தலைமையில் 4 பேர் கொண்ட குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொச்சிக்கு விரைந்து, கொச்சி காவல்துறை உதவியுடன் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயத்தை சென்னைக்கு கொண்டு வந்தனர்.