பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

இந்திய செயிலிங் வீராங்கனை நேத்ரா குமணன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வெள்ளிக்கிழமை தகுதிபெற்றாா்.

ஏற்கெனவே, விஷ்ணு சரவணன் அந்தப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில், தற்போது இந்தியாவுக்கு அதில் 2-ஆவது இடம் கிடைத்துள்ளது.

பிரான்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் ரெகெட்டா தகுதிப்போட்டியில் பங்கேற்ற நேத்ரா குமணன், மகளிா் டிஞ்ஜி (ஐஎல்சிஏ 6) பிரிவில் 67 நெட் புள்ளிகளுடன் ஒட்டுமொத்த பட்டியலில் 5-ஆம் இடம் பிடித்தாா். இந்தப் பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடிப்போரே பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவா். என்றாலும், ‘இஎன்பி’ வாய்ப்பு அடிப்படையில் அவா் பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றாா்.

செயிலிங் விளையாட்டு வளா்ந்து வரும் நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்களும் முன்னேறும் வகையிலான திட்டத்தை (இஎன்பி) உலக செயிலிங் அமைப்பு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, செயிலிங் வளா்ந்து வரும் நாடுகளில் இருந்து சிறப்பாக செயல்படும் போட்டியாளருக்கு ஒலிம்பிக் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் நேத்ரா இந்த வாய்ப்பை கைப்பற்றினாா்.

இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கு பெறும் நேத்ராவுக்கு ஒட்டுமொத்த நாட்டின் சார்பாக வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், #ParisOlympics2024-ல் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.

#TokyoOlympics-ல் பங்கேற்றதன் மூலம், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற தங்கை நேத்ரா, எதிர்வரும் ஒலிம்பிக் 2024-ல் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com