'தாயின் மனச்சோர்வு குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும்' - ஆய்வில் தகவல்
கிராமப்புற சமூகங்களில் உள்ள தாய்மார்கள் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுவதாகவும், தாய்மார்களின் மனச்சோர்வு குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடல்நலப் பிரச்னைகளுடன் நாள்பட்ட மனச்சோர்வும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
'பேமிலி சோசியல் நெட்ஒர்க்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், மனச்சோர்வு கொண்ட தாய்மார்கள் அதிக உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்டனர், அவர்கள் மருத்துவர்கள் மீது ஒரு அவநம்பிக்கையை கொண்டிருந்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தாய்மார்களின் மனச்சோர்வு அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தாய்மார்கள் குடும்பத்தின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர். குழந்தைகளை வளர்ப்பது, வீடு வேலைகளை கவனித்துக்கொள்வது என அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் மனச்சோர்வடைந்தால், முழு குடும்பமும் பாதிக்கப்படுகிறது' என்று வாஷிங்டன் இணை பேராசிரியர் யோஷி சானோ கூறினார்.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மனச்சோர்வு, ஆர்வத்தை இழத்தல், உறவுகள், வேலை மற்றும் உணர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
பெண்களுக்கு ஆண்களை விட இரு மடங்கு மனச்சோர்வு ஏற்படுகிறது. வறுமையில் இருப்பவர்கள் அதை மூன்று மடங்கு அதிகமாக அனுபவிக்கிறார்கள். பல மாநில கிராமப்புற குடும்பங்களின் தரவுகளை பயன்படுத்தி ஆராய்ச்சிக்குழு மூன்று ஆண்டுகள் நடத்திய ஆய்வில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் தெரிய வந்துள்ளது.
தாய்மார்களின் மனச்சோர்வு குழந்தைப் பருவ வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மனச்சோர்வடைந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உணர்ச்சி மற்றும் நடத்தை சிக்கல்களைக் கையாள்வதில் அதிக சவால்களை எதிர்கொண்டனர். மனச்சோர்வு தனிமையில் நடக்காது. இது ஒரு குடும்பம், சமூகம் மற்றும் கலாச்சார சூழலில் நிகழ்கிறது.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.