தற்போதைய வாழ்க்கை முறையில் படுத்தவுடன் தூங்கி விடுபவர்கள் கடவுளின் வரம் பெற்றவர்கள் என்றே கூறலாம். டிஜிட்டல் சாதனங்களால் பலர் தூக்கத்தை இழந்து வாழ்கின்றனர். பெண்கள் பலர் குடும்பச்சுமை காரணமாகவும், வேலைப்பளு காரணமாகவும், உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டு தூக்கத்தை இழக்கின்றனர்.
தூக்கமின்றி தவிப்பவர்களின் பிரச்னையை சரிசெய்யும் பொருட்டு, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு சைக்காலஜிகல் சயின்ஸ் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில், நல்ல தூக்கத்தைப் பெற உங்கள் துணைவரின் டி-ஷர்ட் அல்லது சட்டை போதுமானது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நெருங்கிய உறவுகள் நமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. நெருங்கிய உறவுகள் அருகில் இருக்கும்போது நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒருவேளை அவர்கள் அருகில் இல்லாத காரணத்தினால் கூட தூக்கம் இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு நெருக்கமானவர் அருகில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி அவர் பயன்படுத்தும் டி- ஷர்ட் ஒன்றின் வாசனையை நுகர்ந்துக்கொண்டே கண்ணை மூடுங்கள். சிறிது நேரத்தில் நீங்கள் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்று விடுவீர்கள்.
இதற்கு முன்னதாக நீங்கள் உணர்வுப்பூர்வமாக இதனை உணர்ந்து இருக்கிறீர்களா? இல்லையா? என்பது முக்கியமல்ல. ஆனால், ஒரு சில முறை இதனை முயற்சி செய்து பாருங்கள் என்று கூறுகிறார் ஆய்வாளர் பிரான்சிஸ் சென்.
நெருங்கிய உறவுகள் என்பது உங்களது காதலராகவோ அல்லது கணவராகவோ இருக்கலாம். ஏற்கனவே உங்கள் வாழ்க்கையில் கடந்துசென்ற முக்கிய நபராக இருக்கலாம் என்று கூறுகிறார்.
சுமார் மூன்று மாதத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், தம்பதியரில் ஆணுக்கு ஒரு டி-ஷர்ட் வழங்கப்பட்டு அதனை தொடர்ந்து 24 மணி நேரம் அணியச் செய்தனர். பின்னர் அந்த டி-ஷர்ட் அவரின் மனைவிக்கு வழங்கப்பட்டது. அந்த டி-ஷர்ட்டை தலையணை மேல் வைத்து உறங்கும்போது பெண்கள் 9 மணி நேரத்திற்கும் மேலான ஆழ்ந்த உறக்கத்தைப் பெற்றனர். தூக்கத்தை அளவிடும் கருவி கொண்டும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்புக்குரியவரின் வாசனை அருகில் இருக்கும்போது பெண்கள் ஆழ்ந்த நித்திரை கொள்வதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.