முகபாவனைகள் மனித உணர்ச்சிகளின் உண்மையான வெளிப்பாடு அல்ல என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒருவரின் முகபாவனையை வைத்து அவரது உணர்வுகளைப் பற்றி முடிவுக்கு வருவது தவறானது எனவும் சில உணர்ச்சிகளை முகபாவங்களின் வழியாக காட்ட முடியாது எனவும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
சாதரணமாக, சிலர் வருத்தத்தில் இருந்தாலோ, மகிழ்ச்சியாக இருந்தாலோ அவர்களது முகம் தெளிவாக காட்டிக் கொடுத்து விடும். ஆனால், சிலர் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஒரே மாதிரியாக இருப்பார்கள்.
இந்நிலையில், ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரது உணர்ச்சிகள் குறித்த முடிவுக்கு வந்துவிடக்கூடாது, அதாவது, முகபாவனைகளிலிருந்து ஒருவரது உண்மையான உணர்ச்சியை கண்டறிய முடியாது என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனித முகத்தில் தசை இயக்கத்தின் இயக்கவியலை ஆராய்ந்து அதனை ஒரு நபரின் உணர்ச்சிகளுடன் ஒப்பிடப்பட்டது. இதில், ஒரு நபரின் முகபாவனைகளின் அடிப்படையில் உணர்ச்சிகளைக் கண்டறியும் முயற்சிகள் தவறானது என கண்டறியப்பட்டது. சூழல் மற்றும் கலாசார பின்னணியின் அடிப்படையில் ஒருவர் வெவ்வேறு முகபாவனைகளை செய்கிறார்கள் என்று ஆய்வாளர் மார்டினெஸ் கூறினார்.
புன்னகையுடன் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. மகிழ்ச்சியாக இருக்கும் அனைவரும் சிரிப்பதில்லை. சில நேரங்களில் பொது இடங்களில் சமூக சூழ்நிலை கருதி, கவலையுடன் இருப்பவர்கள் கூட சிரிக்கின்றனர். உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வடகிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.