எடை குறைப்புக்காக அறுவை சிகிச்சை செய்வது எலும்பு முறிவை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் உடல் பருமன் கொண்ட 2,007 நோயாளிகள் எடை இழப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். அதே நேரத்தில் எந்தவித அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளாத சுமார் 2,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுமார் 15 முதல் 18 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில், எலும்பு முறிவுகளுக்கான அதிக நிகழ்வு விகிதம் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சையில் காணப்பட்டது. சுமார் 1,000 பேரில் 22.9 நபருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எலும்பு முறிவு என்பது அதிகரித்து வரும் ஒரு தீவிரமான பக்க விளைவு ஆகும். அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது உடல் முழு பரிசோதனை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கியமாக உடல் எடை குறைப்புக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்துகின்றனர்.