இன்று உலக கை கழுவுதல் நாள். கைகளை சுத்தமாக பராமரிப்பதன் அவசியம் முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு நமக்கு நன்றாகவே புரிந்திருக்கும். ஆம் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள கை கழுவுதல் அவசியமாகிறது. இந்நாளின் முக்கியத்துவம் இந்த ஆண்டு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகளாவிய கைகழுவுதல் நாள் என்பது ஆண்டுதோறும் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கை கழுவுதல் என்பது நோய்களைத் தடுப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் எளிதான, பயனுள்ள வழியாகும்.
கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்னதாக கை கழுவுதல் என்ற தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிப்பதன் மூலம் கரோனா தொற்று மட்டுமல்ல இதுபோன்ற பல கொடிய வைரஸிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும்.
தொடர்ந்து வரும் காலங்களிலும் கை கழுவுவதன் அவசியத்தை நம் அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டியதும் அவசியமாகிறது.
கை கழுவுவதன் அவசியம் குறித்து அப்பல்லோ டெலிஹெல்த் பொது மருத்துவர் சௌமியா ரெட்டி கூறுகையில், பொதுவாகவே வைரஸ் தொற்று பரவும் முக்கிய உறுப்பாக கைகள் உள்ளன. சரியாக கை கழுவுதல் என்பது தொற்று பரவாமல் தடுப்பதற்கான மிக முக்கியமான ஒரு வழிமுறையாகும் என்றார்.
எத்தனால் அல்லது ஐசோபிரைல் ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்படும் திரவங்களை பயன்படுத்தி கை கழுவுதல் சிறந்தது. சுமார் 20 வினாடிகள் கைகளை தேய்த்து கழுவ வேண்டும். 20 வினாடிகள் கைகளை நன்றாக தேய்த்துக் கழுவும்போது தோலின் மேற்புறத்தில் உள்ள வைரஸை அழிக்கிறது என ஆகாஷ் ஹெல்த்கேரின் குடும்ப மருத்துவ ஆலோசகர் டாக்டர் இந்தர் குமார் கஸ்தூரியா கூறினார்,
கை கழுவுவதன் முக்கியத்துவத்தை அறிந்த உலக சுகாதார நிறுவனம், உயிரைப் பாதுகாக்க கைகளை நன்றாக கழுவுங்கள் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
நெருக்கமான இடங்களுக்குச் செல்லும்போது கைகளை கழுவ வேண்டும். கை கழுவ வாய்ப்பில்லாத நேரத்தில் கை கழுவும் திரவத்தை பயன்படுத்த வேண்டும். அதேநேரத்தில் கைக்கு அழற்சி ஏற்படுத்தும் திரவங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறைந்த அளவு ரசாயனம் கொண்ட சோப்பு, திரவங்களை பயன்படுத்துவது நலம். உடல் நலத்தைப் பேண கைகளை சுத்தமாக வைத்திருங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.