தகவல் தொடர்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மனித வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. அந்தவகையில் ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மொபைல் கவருக்கும் கொடுத்து வருகிறோம். மொபைல் போனை அழகாகக் காட்டும் மொபைல் கவருக்கு அதிகம் செலவழிக்காமல் நீங்களே உருவாக்கலாம்.
நீங்கள் மொபைல் போன் வாங்கும்போது அதனுடன் தெளிவாகத் தெரிகின்ற மொபைல் கவர் வரும். இதனை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. வெளியில் பல்வேறு நிறங்களில் வித்தியாசமான மொபைல் கவரை வாங்கி பயன்படுத்துவதை பேஷனாக கருதுகின்றனர். மொபைலை விட மொபைல் கவர் வெளியில் தெரிவதால் அதற்கு பலரும் முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி மாற்றி வருவதும் இருக்கிறது.
இந்நிலையில், மொபைல்போனுடன் வரும் கவரை வீணாக்காமல் பயன்படுத்த பல வழிகள் உள்ளன.
வெள்ளை மொபைல் கவரின் மீது ஒரு வெள்ளை காகிதத்தை ஒட்டி சிறிய ஆர்ட் போன்று வரைபடங்களை வரையலாம். 'நெயில் ஆர்ட்' கலர்களை இதில் பயன்படுத்தலாம்.
அதேபோன்று 'லீஃப் ஆர்ட்' எனப்படும் இலை வடிவங்களை மொபைல் கவரில் ஏற்படுத்தலாம். அதற்கேற்ப வண்ணத்தாள்களை பயன்படுத்தலாம். வண்ணத்தாளில் வெவ்வேறு வண்ண இலை வடிவங்களை ஒட்டி ஒரு மொபைல் கவரை ஏற்படுத்தலாம்.
ஒரு கனமான பேப்பரில் உங்களுக்கு பிடித்த வாசகத்தை எழுதிய/ அச்சிட்டோ அதனை கவரில் பின்புறத்தில் ஒட்டலாம்.
இல்லையெனில் எழுத்துகள் அச்சிட்ட துணி அல்லது தாளை ஒட்டியும் மொபைல் கவரை உருவாக்கலாம்.
மொபைல் போனுடன் கொடுக்கப்படும் கவர் இல்லாதிருந்தால் மரத்தாள்கள் அல்லது அட்டைகளை பயன்படுத்தி உங்கள் மொபைல் போனுக்கு ஏற்றவாறு வடிவமைக்கலாம்.
வீணாக்காமல் இவ்வாறு அலங்கரித்து பயன்படுத்தலாம். நீங்களே உருவாக்கியது என்பதால் இது மனதுக்கு நெருக்கமாகவும் இருக்கும்.