வாரிசு அரசியலை முன்னெடுப்பதாக தேசிய அளவிலும் சரி தமிழக அளவிலும் சரி ஒரு சில முக்கியக் கட்சிகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றன.
பரம்பரை பரம்பரையாக ஒருவர் நாட்டை ஆண்ட பிறகு, அவரது மகன் மன்னராக முடி சூட்டிக் கொண்டு நாட்டை ஆளும் முறையை ஒழித்துவிட்டு, மக்களால், மக்களுக்காக மக்களில் ஒருவரை தேர்வு செய்து ஆட்சி செய்யும் ஜனநாயக முறை உருவாக்கப்பட்டது.
மக்களால் தேர்வு செய்யப்படும் ஒருவர் நாட்டை, மாநிலத்தை ஆட்சி செய்யும் முறையை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனை மறுப்பதற்கில்லை.
ஆனால், தற்போது இந்த ஜனநாயக ஆட்சி முறையில் கண்ணுக்குத் தெரியாமல் கரையான் அரிப்பது போல கட்சித் தலைமைப் பதவியை ஒருவருக்குப் பின் அவரது மகன் கைப்பற்றும் முறை பரவி வருகிறது.
இது கட்சியோடு நின்று விடாமல், அந்த கட்சி தேர்தலில் ஜெயிக்கும் போது, அக்கட்சியின் வாரிசு அரசியல் முறை நாட்டின் மீதும் திணிக்கப்படுகிறது. ஒரு கட்சியில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும், கட்சித் தலைவரின் மகனே அடுத்தத் தலைவராக பதவியேற்பது அக்கட்சிக்கும் துரதிருஷ்டவசமானதுதான். இது எந்த கட்சியையும் சுட்டிக்காட்டி வைக்கப்படும் விமரிசனம் அல்ல. பொதுவானக் கருத்துதான்.
சரி.. இவ்வளவையும் சொல்லிவிட்டு, தலைப்புக்கு வந்துதானே ஆக வேண்டும்.
அதாவது, 2019 மக்களவைத் தேர்தலில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் வாரிசுகளின் பட்டியல் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்...
வட சென்னை
கலாநிதி - ஆற்காடு வீராசாமி (தந்தை) - திமுக
மத்திய சென்னை
தயாநிதி மாறன் - முரசொலி மாறன் (தந்தை) - திமுக
தூத்துக்குடி
கனிமொழி - மு. கருணாநிதி (தந்தை) - திமுக
தமிழிசை சௌந்தரராஜன் - குமரி அனந்தன் (தந்தை) - பாஜக
தெற்கு சென்னை
தமிழச்சி தங்கபாண்டியன் - தங்கபாண்டியன் (தந்தை) - திமுக
ஜெயவர்தன் - ஜெயக்குமார் (தந்தை) - அதிமுக
வேலூர்
கதிர் ஆனந்த் - துரைமுருகன் (தந்தை) - திமுக
கள்ளக்குறிச்சி
கௌதம் சிகாமணி - பொன்முடி (தந்தை) - திமுக
எல்.கே. சுதீஷ் - விஜயகாந்த் (மைத்துனர்) - தேமுதிக
தென்காசி
தனுஷ் குமார் - தனுஷ்கோடி (தந்தை) - திமுக
தேனி
ரவீந்திரநாத் - ஓ. பன்னீர்செல்வம் (தந்தை) - அதிமுக
மதுரை
விவிஆர் ராஜ்சத்யன் - ராஜன் செல்லப்பா (தந்தை) - அதிமுக
திருநெல்வேலி
பி.எச். மனோஜ் பாண்டியன் - பி.எச். பாண்டியன் (தந்தை) - அதிமுக
தருமபுரி
அன்புமணி ராமதாஸ் - ராமதாஸ் (தந்தை) - பாமக
சிவகங்கை
கார்த்தி சிதம்பரம் - சிதம்பரம் (தந்தை) காங்கிரஸ்
கன்னியாகுமரி
வசந்தகுமார் - குமரி அனந்தன் (சகோதரர்) காங்கிரஸ்
இந்த பட்டியலில் தமிழிசையைத் தவிர மற்ற அனைவருமே, தங்களது தந்தையின் அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி அரசியலில் நுழைந்து இன்று முக்கியக் கட்சிகளின் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதில் இருந்து வேறுபட்டு பாஜகவில் இணைந்து அதன் வேட்பாளராக உயர்ந்திருக்கிறார் தமிழிசை. அவரது தந்தைக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அரசியலில் குதித்த தமிழிசை, தனது திறமையால் மட்டுமே பாஜகவின் மாநிலத் தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்பதை இங்கே மறுக்க முடியாது.