மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி மாலை 2 மணிக்கு ஸ்ரேயா தேவ்நாத்தின் வயலின் நிகழ்ச்சி. இவர் லால்குடி ஜெயராமனின் தயாரிப்பு. கடந்த நான்கு ஆண்டுகளாக சீசன் மேடைகளில் வாசித்து வரும் இளம்கலைஞர்.
அன்றைய நிகழ்ச்சியில் குரு ராகவேந்திரா மிருதங்கம், சுனீல்குமார் கஞ்சிரா. லால்குடியின் சாமா ராக வர்ணத்துடன் தொடங்கிய இவரது நிகழ்ச்சியின் அடுத்த உருப்படி மலையமாருதம் ராகத்தில் ஸ்மரண ஒண்தே சாலதே. தொடர்ந்து ரீதிகெüளை ராக ஆலாபனை. ஜனனி நினுவினாதான் சாகித்யம். கல்பனா ஸ்வரமும் வாசித்தார். அடுத்தாற்போல தாமதம் தகாதய்யா என்கிற லால்குடியின் மோகன கல்யாணி ராக சாகித்யம். இந்த மோகன கல்யாணி ராகம் யாராவது பாடினாலோ வாசித்தாலோ மகராஜபுரம் சந்தானத்தின் ஞாபகம் வந்துவிடுகிறது. அவரது ஃபேவரைட் ராகம் இது.
அன்றைய நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க அம்சம்தோடி ராக ஆலாபனை. விஸ்தாரமாக இருந்தது என்பது மட்டுமல்ல, ராக லட்சணம் முழுமையாக வெளிப்படும் விதத்தில் அமையவும் செய்தது. கதி நீவனி என்கிற சாகித்யம். சரணத்தில் நிரவல் கல்பனா ஸ்வரம். தொடர்ந்து தனியாவர்த்தனம்.
கானடா ராகத்தில் என்ன சொல்லி அழைத்தால், மதுவந்தி ராகத்தில் லால்குடி அமைத்த தில்லானா, இரண்டையும் வாசித்து கச்சேரியை நிறைவு செய்தார் ஸ்ரேயா தேவ்நாத். தப்புச் சொல்ல முடியாத வாசிப்பு ஸ்ரேயாவுடையது!