சிங்கப்பெருமாள் கோயில் - திருப்பெரும்புதூர் சாலையில் அமைந்திருக்கும் திருக்கச்சூரில் உள்ள அருள்மிகு அஞ்சனாட்சி அம்மை உடனுறை அருள்தரு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் மஹாந்யாச ருத்ர பாராயணம் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது.
தல வரலாறு:
அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது.
அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையைத் தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.. இத்தலம் ஆதிகச்சபேஸம் என்றும் அழைக்கப்படுகிறது.
உலகெலாம் உணர்ந்தோதற்கரிய பெருமான், பசித்துக் களைத்திருந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இரந்து, விருந்திட்ட திருத்தலமாகிய திருக்கச்சூரில் நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 30-ம் தேதி (15-08-17) செவ்வாய்க்கிழமை நன்னாளில் காலை 6.00 மணி முதல் உலக நன்மைக்காகவும் அமைதிக்காவும் அருள்மிகு அஞ்சனாட்சி அம்மை உடனுறை அருள்தரு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் மஹாந்யாச ருத்ர பாராயணம் மற்றும் மஹா அபிஷேகம் நடைபெறுகிறது.
அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆலயக்கோயில் அம்மானின் திருவருள் பெற வேண்டுகிறோம்.