புதிதாகக் திருக்கோயிலைக் கட்டுவதைக் காட்டிலும் வழிபாட்டில் உள்ள பழமையான திருக்கோயிலைப் போற்றி பாதுகாப்பதே சிறந்தது என ஆன்றோர்கள் கூறுகின்றனர். கோயில்கள் மீது வளர்ந்து அழிவு ஏற்படுத்தும் செடி, கொடிகளை உழவாரம் கொண்டு அகற்றிய பெரும் பணியினை நாவுக்கரசர்பெருமான் மேற்கொண்டதை நாம் அறிவோம்.
சென்னை, வேலூர் நெடுஞ்சாலையில் 90 கி.மீ தொலைவில் ஓச்சேரியிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சௌபாக்கியவதி சமேத சந்திரமெளீசுவரர் கோயிலில் 24.12.17 அன்று அண்ணாமலையார் உழவாரப் பணிக்குழுவினர் இராமசந்திரன் தலைமையில் உழவாரப் பணியினை மேற்கொண்டனர்.
கோயிலின் மீதும், அதனை சுற்றியும் முளைத்திருந்த செடிகள், சிறுமரங்கள் அகற்றப்பட்டு திருக்கோயில் சீர்திருத்தப்பட்டது. இக்கோயிலில் இருவேளை வழிபாடு நடைபெற்று வந்தாலும், திருக்கோயில் தூய்மை செய்யப்பட்டு வழிபாடுகள் சிறப்பாக நடைபெற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தெய்வ பிரசன்னம் பார்த்ததில் இக்கோயில் சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்கும் எனவும் இக்கோயிலில் 11 அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும். குறை ஏதும் இருக்காது என அறியப்பட்டது.
இத்திருக்கோயில் உழவாரப்பணியில் தண்டலம் ராஜலட்சுமி கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பேராசிரியர் ஆனந்தராஜ் தலைமையிலும், நயப்பாக்கம்-கருணாகரச்சேரி ஊர்களைச் சேர்ந்தவர்களும் மாமண்டூர் திருக்கோயில் தூய்மை பணியில் பங்குகொண்டனர். மாமண்டூர் கிராமத்து மக்கள் வினாயகமூரத்தி தலைமையில் பங்கு கொண்டனர். மாமண்டூர் கிராமத்து மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்புக்கு - ராமசந்திரன் - 9884080543
தகவல் - கே. ஸ்ரீதரன்