வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சம் போக்கும் ஷட்திலா ஏகாதசி விரதம்!

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.
வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சம் போக்கும் ஷட்திலா ஏகாதசி விரதம்!

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். அதாவது சூரியனிடமிருந்து சந்திரனுக்கு இருக்கும் இடைவெளியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அந்த விதத்தில் அமாவாசை அல்லது பௌர்ணமி நாளில் இருந்து பதினோராவது நாளை ஏகாதசி எனும் பெயரில் ஜோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறது.

ஷட் தில ஏகாதசி

மாசி மாத கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி ஷட்திலா (ஷட் என்றால் ஆறு, திலா என்றால் எள்) ஏகாதசி என்று அழைக்கப்படும். அன்னதானம் செய்யாத ஒரு பெண் எள் மட்டும் கொடுத்து சுவர்க்கம் புகுந்த கதை இந்த ஏகாதசிக்கு அடிப்படையாக அமைந்தது. அவரைச் சோதிக்க விஷ்ணு, ஒரு பிச்சைக்காரர் வேஷத்தில் வந்தார் என்றும் அப்போது அவர் மண் உருண்டை ஒன்றை மட்டுமே கலயத்தில் போட்டார் என்றும் கதை. அவர் சொர்க்கம் புகுந்தபோதும் தானம் என்ற ஒன்றைச் செய்யாததால் பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வறட்டி தட்டியதில் எள்ளும் கலந்ததாகவும் அது ஹோமத்தில் பயன்படுத்தப்பட்ட போது அந்தப் புண்ணியமே அவரைக் காப்பாற்றியது என்றும் கூறுவர்.

இந்த நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை ஆறு விதமாகப் பயன்படுத்துவார்கள்.

1. எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொண்டு நீராடுவது.

2. எள் தானம் செய்வது.

3. எள்ளால் ஹோமம் செய்வது.

4. எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது.

5. எள் அன்னம் உண்பது.

6. எள் தானம் பெறுவது.

இப்படி 6 வகையான எள் பயன்பாடு ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது. இதனால் அநேகப் பாவங்கள் விலகுகின்றன என்றும் எள்தானம் செய்த அளவிற்கேற்ப அத்தனை 1௦௦௦ வருடகாலம் சுவர்க்கத்தில் வசிக்கும் பேறுபெறுவர்.முன்னொரு காலத்தில் பூலோகத்தில் பல தர்மங்கள் செய்த பெண்ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள். 

சொர்க்கத்தின் எல்லா வசதிகளும் அவளுக்குக் கிடைத்தாலும் உணவு மட்டும் கிடைக்கவில்லை. ஏனெனில் பூவுலகில் இருக்கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை. ஒருவன் அன்னதானம் செய்யாமல் அவனால் தேவலோகத்தில் ஜீவிப்பது கூட கடினம். எனவே அவளது இக்குறையைத் தீர்க்க எண்ணி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பிச்சைக்காரன் வடிவில் சென்று அவளிடம் அன்னபிக்ஷை வேண்டினார். அதைக் கேட்டவள் ஆத்திரத்தில் மணலால் ஆனதொரு பிண்டத்தை அவருக்கு தானமளித்தாள். அதனை எடுத்துக் கொண்டு அவரும் வந்துவிட்டார்.

அதனைக்கொண்டு சுவர்க்கத்தில் ஒரு அழகான வீட்டை ஸ்ரீ கிருஷ்ணர் அமைத்தார். மணலால் ஆன பிண்டத்தை தானம் அளித்த பலனால் அவள் வாழ்வு முடிந்து சுவர்க்கம் வந்தபோது மாமரத்துடன் கூடிய வீடு இருந்தது. ஆனால் வீட்டினுள் தனம், தானியம், இருக்கைகள் ஏதுமின்றி அவள் அளித்த மண்ணைப் போலவே இருந்தது. அதனைக் கண்டவள் மிகவும் பயத்துடனும், கோபத்துடனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து பூவுலகில் இத்தனை விரதங்கள் கடைப்பிடித்து வந்தேன். ஆனால் எனது வீட்டில் ஏதும் இல்லாததற்கான காரணம் என்ன இறைவா? என்றாள்.

அவளிடம் ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கான காரணத்தைக் கூறிய போது, அதிலிருந்து மீள வழி என்ன என்று கேட்டாள். அப்போது அவளிடம், இப்போது உன் இல்லத்திற்கு உன்னைக் காண தேவஸ்த்ரீகள் வருவர். அவர்கள் வரும் வேளையில் கதவை அடைத்து, அவர்களிடம் இந்த ஷட்திலா ஏகாதசி மகாத்மியத்தைக் கேள். அவர்கள் கூறும் வரை கதவைத் திறக்காதே என்றார். அவளும் அப்படியே செய்தாள். அதனைக் கேட்ட அனைத்துப் பெண்களும் சென்றுவிட்டனர். சற்று நேரத்தில் அவளைக் காணும் ஆவலில் திரும்பி வந்த தேவஸ்த்ரீகள், அவளிடம் ஷட்திலா ஏகாதசியின் மகாத்மியத்தைக் கூறினர். பிறகு அதனைக் கேட்டு, கதவைத் திறந்தாள். அந்த வீட்டில் இருப்பது ஒரு கந்தர்வியோ, நாகரோ, இல்லாமல் ஒரு மானுடப்பெண் நிற்பது கண்டு வியந்து சென்றனர்.

அதன் பின்னர், அந்த பிராமணஸ்திரீ ஷட்திலா ஏகாதசி விரதத்தை நியமம் தவறாது கடைப்பிடித்தாள். அதன் பலனாக அவளது உடல் தேவஸ்த்ரீகளைப் போன்று ஜொலித்தது. அவளது இல்லம் முழுவதும் தனம், தானியங்களால் நிரம்பி வழிந்தது. அவளது வீடு ஸ்வர்ணமயமான மாளிகையாக மாறி பேரொளியோடு மின்னியது. எனவே, பகட்டுக்காக இல்லாமல் பக்தியுடன் ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் இறுதியில் சுவர்க்கமும், எல்லாப் பிறவிகளிலும் ஆரோக்கியமும், இறுதியில் முக்தியும் கிடைக்கும்.

எவரொருவர் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் அவருடைய பாவங்களிலிருந்து விடுபடுகிறார். மேலும் இந்த விரதத்தினால் அவரை எந்தவொரு தீய சக்தியும், தீய சகுனங்களும் பின்தொடராது என்றும் அவரது இல்லத்தில் வறுமை என்ற பேச்சுக்கே இடமின்றி தனம், தானியங்களால் நிரம்பி வழியும். அது மட்டுமின்றி, இந்த விரதத்தினை தான, தர்மங்களோடு கடைப்பிடிப்பவருக்கு என்றும் உணவுப் பஞ்சமே வராது என்றும் அவர்கள் பல பிறவிகளிலும் நித்ய ஆரோக்கியத்துடன் விளங்குவதோடு இறுதியில் அவர்கள் முக்தி அடைவர் என்று புலஸ்திய முனிவர் தாலப்ய முனிவருக்குக் கூறி முடித்தார் என்றும் புலஸ்திய மகரிஷி தாலப்ய மகரிஷியிடம் கூறியதாக புராணக் கதைகளில் காணப்படுகின்றது.

அன்ன தோஷமும் அன்ன த்வேஷமும்

கர்ப்பிணிகள் வந்து பசி என்று பிச்சை கேட்கும் போது, அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை, பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் புசிப்பதற்கு எதுவும் கொடுக்காதவர்களை, உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களைக் கோபித்து, உணவைச் சாப்பிடவிடாமல் விரட்டி அடிப்பவர்களை, தன் தேவைக்கும் அதிகமாக உணவைத் தயார் செய்து வீணடிப்பவர்களை, தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களை, மற்றும்  பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களை, பந்தியில் வஞ்சனை செய்பவர்களை (அதாவது சாப்பிடும் பந்தியில் நமக்கு வேண்டியவர்களுக்கு தேவையான உணவை அளித்து மற்றவர்களை கவனியாமல் இருப்பது), கறவை நின்ற பசு மாட்டிற்குத் தேவையான உணவு அளிக்காதவர்களை அன்னதோஷம் பீடிக்கும் என சாஸ்திரம் கூறுகிறது. அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும்.

ஜாதகப்படி அன்ன தோஷமும் அன்ன துவேஷமும் யாருக்கு?

ஜோதிடத்தில் அடிப்படை உணவின் காரகர் சந்திர பகவான் ஆவார். சுவையான உணவு வகைகளின் காரகர் சுக்கிரன் ஆவார். உணவினை குறிக்கும் போஜன ஸ்தானம் எனப்படுவது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபம் மற்றும் ஜாதக இரண்டாம் பாவமாகும். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் அடைவதும் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. சந்திர பகவான் ஒருவர் ஜாதகத்தில் 6/8/12 தொடர்புகள் பெற்றோ அல்லது பாதகாதிபதி தொடர்பு பெற்று அல்லது நீசமடைந்து நிற்க அவர்களுக்கு பால், தயிர், அரிசி சோறு போன்ற பொருட்களை அடிக்கடி வீணடிப்பதால் அன்னதோஷம் ஏற்படும்.

2. கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபத்திலும் உணவைக் குறிக்கும் சந்திரனின் ஆட்சிவீடான கடகத்திலும் அசுப கிரகங்கள் நிற்க அஞ்சாமல் உணவுப்பொருட்களை வீணடிப்பார்.

3. ஒரு ஜாதகரின் இரண்டாம் பாவத்தில் சூரியன் அசுப தொடர்பு பெற்று அல்லது பாதகாதிபதியாகி நிற்க கோதுமை மற்றும் கோதுமையில் செய்த உணவுப் பொருட்கள், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை வீணாக்கிடுவார். அதுவே காலபுருஷனுக்கு 6/8/12ம் வீடாக மேற்கண்ட உணவுகளை வெறுத்து ஒதுக்குவார்.

4. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க அந்த ஜாதகர் ஊறுகாய், வடான், வத்தல் வகைகள், சூடான சாப்பாடு வகைகளைக் கூட வீணாக்கிடுவார். காரம் என்ற காரணத்தை காட்டி ஆகாரத்தை வீணடிப்பார்.

5. ஒருவர் ஜாதகத்தில் புதன் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க பசுமையான காய்களை சமைக்காமலேயே வீணக்கிடுவார். மேலும் தேவைக்கு அதிகமாக நொறுக்கு தீனிகளை வாங்கி வீணடிப்பதும் இவர்கள்தான்.

6. ஒருவர் ஜாதகத்தில் குரு அசுபராகி இரண்டில் நிற்க நெய்யில் செய்த இனிப்பு வகைகள், பழங்கள் முதலியவற்றை வீணடிப்பார்.

7. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் அசுபராகி இரண்டாம் பாவத்தில் நிற்க விருந்து மற்றும் உணவகங்களில் உண்டு வீட்டு உணவுகளை வீணடிப்பார்.

8. ஒருவர் ஜாதகத்தில் சனி இரண்டாம் பாவத்தில் அசுப தொடர்பு பெற்று நிற்க எண்ணெய்யில் பொறித்த உணவுகள் கிழங்கு வகைகள் அளவுக்கதிகமாக செய்து வீணடிப்பார். மேலும் பழைய உணவுகளை உண்டு உடம்பைக் கெடுத்துக்கொள்வர்.

9. ஒருவர் ஜாதகத்தில் ராகு இரண்டாமிடத்தில் நிற்க மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்டு பாரம்பரிய உணவுகளை வீணடிப்பார்.

10. ஒருவர் ஜாதகத்தில் இரண்டில் கேது நிற்க இவருக்காக உணவு செய்து வருந்துவதுதான் மிச்சம். உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடைசியில் ஏதோ ஒரு 
பழைய உணவை உண்டுவிடுவார்.

11. துலா லக்னமாக இருந்து தர்மகர்மாதிபதியான சந்திரன் இரண்டாம் பாவத்தில் நீசம் பெற்றால் விருந்து என்ற பெயரில் உணவுப் பொருட்களை வீணடிப்பார்.

12. எந்த ராசி நேயர்களாக இருந்தாலும் சந்திராஷ்டம தினங்களில் சாப்பிடாமல் வீணடிப்பார்.

அன்னதோஷத்தை போக்கும் பரிகாரங்கள்

1.அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதுவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும். இப்படி அன்னதோஷத்தாலும் அன்ன துவேஷத்தாலும் பீடிக்கப்பட்டவர்களும் ஷட்திலா ஏகாதசி விரதமிருந்து உலகத்திற்கே படியளந்துவிட்டு சயன கோலத்தில் இருக்கும் திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை வணங்க அன்னதோஷம் நீங்கும். மேலும் உணவின் மீது வெறுப்படைய செய்யும் நோயான அன்னதுவேஷம் நீங்கும்.

2. உலகத்துக்கே படியளந்துவிட்டு படியை தலையில் வைத்துப் படுத்திருக்கும் சுக்கிர ஸ்தல மூர்த்தி ஸ்ரீரங்கநாதரை ஷட்திலா ஏகாதசியில் வணங்கிவர உணவு வீணாவது குறையும்.

3. உணவுப்பொருட்களைக் குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரையும் குறிக்கும் ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

4. சுக்கிரனின் அதிதேவதை மற்றும் சந்திர சகோதரியான தான்யலக்ஷமியை வணங்கிவர உணவு வீணாவது குறையும்.

5. அவரவர்கள் கிராம தேவதைக்குப் பொங்கல் வைத்து வழிபட உணவு வீணாவது குறையும்.

6. அந்தந்தவருட தான்யாதிபதியை பஞ்சாங்கபடி வணங்கிவர உணவுப் பஞ்சம் நீங்குவதோடு உணவு வீணாவதும் குறையும்.

7. முன்னோர்களின் திதி நாட்களில் பிராமணர்களுக்கு போஜனம் அளிப்பது அன்ன தோஷத்தோடு பித்ரு தோஷத்தையும் போக்கும்.

8. அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்குத் தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி (பச்சரிசி) வாங்கி கோயிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்துபேருக்குப் போஜனம் அளிப்பது.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com