தஞ்சாவூர் பெரிய கோயிலில் விக்ரகங்களுக்கு மாவு காப்பு செலுத்தும் பணி இன்று காலை தொடங்கியது.
பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் 2020 பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடந்த 2-ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று சுவாமி விக்ரகங்களுக்கு மாவு காப்பு செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த பணியில் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த 50 பெண்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தயிர் மற்றும் பச்சரிசி மாவு கொண்டு இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதனை கற்சிலையில் பூசும் பணி இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து அதைச் சுத்தம் செய்து பின்னர் எண்ணைக் காப்பு செய்ய உள்ளனர். இந்த பணி இன்று தொடங்கி 15 நாட்களுக்குத் தினமும் நடைபெற உள்ளது.