திருப்பதி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் தான். அதற்கு அடுத்தது என்றால் உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதம்.
சாமானியர்களும் இந்த லட்டுக்களைக் குறைந்த விலையில் வாங்கவேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து குறைந்த விலையில் அதாவது மானிய விலையில் லட்டுக்களை மக்களுக்கு வழங்கி வருகின்றது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் மானிய விலையில் லட்டுக்களை வழங்குவது தேவஸ்தானத்துக்குக் கட்டுப்படி ஆகவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, திருப்பதி லட்டின் விலையை ரூ.50 ஆக உயா்த்த தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழுமலையானை தா்ம தரிசனம், திவ்ய தரிசனம் (நடைபாதை தரிசனம்), நேர ஒதுக்கீடு தரிசனம் உள்ளிட்டவற்றில் தரிசனம் செய்பவர்களுக்கு 2 லட்டுகளை தலா ரூ.10 என்ற மானிய விலையில் திருப்பதி தேவஸ்தானம் அளித்து வருகிறது. எனினும், ஒரு லட்டைத் தயார் செய்ய தேவஸ்தானத்துக்கு ரூ.50 செலவாகிறதாம். இருப்பினும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று மானிய விலையில் லட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனை ஈடுசெய்ய, லட்டின் விலையை ரூ.50-ஆக உயர்த்துவது பற்றி தேவஸ்தானம் பரிசீலித்தது. அவ்வாறு விலை உயர்த்தப்பட்ட பின் பக்தர்கள் தாங்கள் விரும்பும் எண்ணிக்கையில் லட்டுகளை வாங்க முடியும். தவிர, ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு ஒரு லட்டை இலவசமாக வழங்குவது பற்றியும் தேவஸ்தானம் ஆராய்ந்து வருகிறது.
இதுகுறித்து அறங்காவலர் குழுவுடன் கலந்தாலோசித்து இன்னும் ஓரிரு நாள்களில் லட்டு விலையை உயா்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லட்டு விலை ஏற்றப்படுவதைக் கண்டித்து ஏழுமலையானின் பக்தர்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். லட்டு விலையை உயர்த்தும் முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று பல்வேறு மடாதிபதிகளும், பீடாதிபதிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.