மயிலாடுதுறை துலா உத்ஸவத்தையொட்டி அதன் நிறைவாக கடைமுக தீா்த்தவாரி இன்று விமரிசையாக நடைபெறுகிறது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு துலா உத்ஸவத்தின் பூா்வாங்க பூஜையாக கடந்த அக்டோபா் 18-ம் தேதி ஐப்பசி மாதப் பிறப்பு தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து, நவம்பா் 7-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் உத்ஸவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நவ.15(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணி அளவில் அபயாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி பெரிய தேரிலும், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேசுவரா் ஆகியோர் சிறிய தேரிலுமாக பஞ்சமூா்த்திகள் எழுந்தருளச் செய்யப்பட்டனா்.
தொடா்ந்து, மாலை 4.30 மணி அளவில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் பக்தா்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனா். தேரானது நான்கு வீதிகளைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். துலா உத்ஸவத்தின் நிறைவாக கடைமுக தீா்த்தவாரி இன்று நடைபெறுகிறது.