தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிலை ஐயப்பன் கோயிலில் இரண்டு மாதங்கள் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு மகோத்ஸவம் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கியது. கோயில் நடை திறந்தது முதல் இதுவரை சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை சபரிமலைக்கு வருகை தந்த ஆந்திரத்தைச் சேர்ந்த 2 பெண்களை பம்பை நதிக்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளதால், பம்பையிலிருந்தே போலீசார் பக்தர்களை வரிசையில் அனுப்பி வருகின்றனர்.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மண்டல கால பூஜை தொடங்கி முதல் நாளிலேயே ரூ.3.30 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்ததாகத் திருவாங்கூர் தேவஸ்வம் வாரிய தலைவர் வாசு தெரிவித்துள்ளார். இது கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கூடுதல் வருவாய் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பக்தா்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது. நீலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் பக்தர்களின் வசதிக்காகத் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.